Thursday, June 12, 2008

"காலச்சுவடு" இதழின் விமர்சனம்

மதுரையில் அ.மங்கை, வ.கீதா இணைந்து உருவாக்கியிருந்த 'காலக் கனவு' நாடகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. மதுரையில் நாடக நிகழ்விற்கு நண்பர் தேவேந்திரபூபதியின் 'கடவு' அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. அதில் ஒரு பாத்திரத்தை ஏற்றிருந்த பிரேமா ரேவதி என்னை அழைத்தது மதுரை செல்வதற்கான தூண்டுதலாக இருந்தது (பூபதி என்னை ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை!). சென்றதற்கான இன்னொரு காரணம் நண்பர் சுரேஷ் குமார இந்திரஜித் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் நிலையில் பார்த்து விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம். முன்னறிவிப்பு இல்லாமல் மதுரை விஜயம். முதல் தொலைபேசி அழைப்பு, நண்பர் படுக்கையில் இல்லை; அலுவலகம் மீண்டுவிட்டார் என்பதை அறியத்தந்தது. நண்பர் மீண்டுவிட்டதில் மகிழ்ச்சிதான் என்றாலும், கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. அன்று காலை நான் பங்கேற்கவேண்டிய ஒரு தனிப்பட்ட நாடகம் ரத்து செய்யப்பட்டுவிட்டது போல!

நவீன நாடகங்கள் பத்துப் பதினைந்து பார்த்திருப்பேன். 'காலக் கனவு' நிகழ்வை மிகுந்த ஈர்ப்புடன் பார்க்க முடிந்தது. எனக்குப் பலப்பல புதிய செய்திகள். 'கற்பாபிமானம்' என்ற பெரியாரின் தொடர் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவரது பெயர் சொல்லி இயங்கும் பல சமகாலப் பண்பாட்டுப் பழமைவாதிகளை விளங்கிக்கொள்ள அவரே ஒரு கருவியைத் தந்ததுபோல. பாரதிக்கு முன்னும் பின்னும் நகர்ந்து தமிழ்ப்பெண்ணின் விடுதலைக்கான குரல்களையும் செயல்பாடுகளையும் அந்நிகழ்வு அரங்கேற்றியது. அப்போராட்டத்தின் வரலாற்றை மீட்டுக்கொள்வது இந்நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்திருக்கலாம்.
பிரதியைத் தயாரித்திருந்த வ. கீதா தேசிய, திராவிட, இடதுசாரி இயக்கங்கள், கிறிஸ்தவம், இலக்கிய முயற்சிகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடுநிலையோடு தொகுத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது. அ. மங்கையின் இயக்கத்தில் நாடகம் தியேட்டருக்கான சாத்தியங்களைக்கொண்டிருந்ததா என்பது பற்றிய விவாதம் பின்னர் அறையில் எழுந்தது. ஒரு 'வாசிப்பு நிகழ்த்துதல்' என்ற அளவில் நல்ல முயற்சி என்பதே பொதுக் கருத்தாக இருந்தது. பங்கெடுத்த பெண்கள் எல்லோருமே நாடகப் பிரதியின் கருத்தியலோடு மனம் ஒன்றியவர்கள் என்பதால் நிகழ்த்துதல் இயல்பாகவும் உற்சாகமாகவும் இருந்ததுநாடகப் பிரதி நூலாக வரவேண்டியது அவசியம்

No comments: